
வேகமாக வளர்ந்து வரும் இல்லை வளர்ந்து விட்ட டிவன்டி-20 கிரிக்கட் போட்டிகளுக்கு மத்தியில் பிரபல்யம் மற்றம் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டி அழிந்து போகுமோ என்ற நிலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணியும் தமது திறமையினை நிரூபித்தே வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறுமா? என எதிர்பார்த்திருந்த நாட்கள் இன்று மலையேறி போய்விட்டது.
ஆம் இன்றைய தினத்தில் ஐ.சீ.சீ யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை இலங்கை கிரிக்கட் இரசிகர்களை மாத்திரமின்றி ஆசிய கண்டத்தின் கிரிக்கட் இரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். காரணம்; ஐ.சி.சி டெஸட் கிரிக்கட் போட்டி தரவரிசை பட்டியல்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணியொன்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அதுவும் இலங்கை அணிக்கே இரண்டாம் இடம் எனும் போது இலங்கையன் என்ற வகையில் நான் பெறுமையடைகின்றேன்.

2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.சி.சி யின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக 4 ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமையானது கிரிக்கட் விளையாடும் வளாந்து வரும் நாடுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் தங்களாலும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையினையும் அவர்கள் மனதில் விதைத்துள்ளது என்றால் அது சாலப்பொருந்தும்.
இப்படி இலங்கை அணியின் அபரிதமான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தற்கும் இலங்கை அணி கடந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் காட்டிவரும் திறமையும், ஈட்டிவரும் வெற்றிகளுமே மூலக்காரணமாக அமைகின்றது.
இலங்கை அணியின் இந்த மாற்றததிற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால்....... இந்த மாற்றததிற்கு அணியின் தலைமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடு, வெற்றிக்காக இறுதிவரை போராடும் குணம் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றது. அதிலும் அணியின் தலைமைத்துவ மாற்றம் இதில் பெரும் பங்காற்றி வருகின்றதாகவே நான் கருதுகின்றேன்.
தலைமைப் பொறுப்பேற்ற சங்ககார மிகவும் திறமையாக செயற்படுகின்றார் என்று கூறுவதை விட அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கிறது என்றே கூறலாம்.
சில போட்டிகளில் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் அவர் தவறான முடிவெடுத்ததனையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்க அது சாத்தியமானதையும் நாம் கண்டுள்ளோம்.

இது ஒருபுறம் இருக்க டெஸ்ட் போட்டிகளில் இலங்கை உருவாக்கிய மற்றுமொரு அதிரடி ஆரம்பம் தான் டில்ஷான். டில்ஷானின் அதிரடியான ஆரம்பம் எதிரணியின் எதிரணியின் ஆரம்ப பந்துவீச்சு வரிசையை சீர்குழைப்பதுடன் அவர்களிடைய உளரீதியான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. டெஸ்ட் போட்டிகளில் மிககவனம் செலுத்தப்படவேண்டடிய ஓட்ட வேகம் என்பது இதன் மூலம் அதாவது டில்சானின் அதிரடிமூலம் அதிகரிக்க இலங்கை கணிசமான ஓட்டங்களை குவிக்க உதவுகின்றது. இதுவும் டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியில் முக்கிய பாத்திரமாகின்றது.
அடுத்து நாம் கண்டிப்பாக கூறவேண்டியது திலான் சமரவீரவின் பொறுப்பான துடுப்பாட்டம். மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட வரும் இவர் விக்கட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை பெறுவது இலங்கையணியின் மற்றுமொரு சக்தியாகும்.
இவர்களை விடுத்து தேவையான சந்தர்ப்பங்களில் திறமையை வெளிபடுத்தும் அணித்தலைவர் மற்றம் முன்னாள் அணித்தலைவர்களின் துடுப்பாட்டத்துடன் புதிய வரவான மெத்தியூசின் துடுப்பாட்டமும் ஓட்டங்களை பெற துணைபுரிகின்றது.
இவையனைத்தையும் தொடர்ந்து டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றி என்பது எதிரணியின் 20 விக்கட்டுக்களிலேயே தங்கியுள்ளதாhல், பயமுறுத்தும் பந்துவீச்சும் இலங்கையின் வெற்றியின் மற்றுமொரு பரினாமமே!. குரசேகர, துஷார வேகத்தில் மிரட்ட முரளி, மென்டிஸ் சுழலில் கலக்;க இலங்கையின் வெற்றி பயணம் தொடர்கிறது.
இருந்த போதிலும் ஒரு சிறிய வருத்தம் இன்றும் தொடர்கிறது.. தாயகத்தில் தலைமிர வைத்த சிங்கங்கள் அந்நிய மண்ணிலும் அசத்துமா? என்ற கேள்வி எம்மக்கள் மத்தியில் இன்றுவரையில் இல்லாமலில்லை.
சொந்த மண்ணில் திறமைகளை காட்டும் இலங்கை, அந்நிய மண்ணிலும் திறமையாக விளையாடி ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பெற அன்புடன் வாழ்த்தும் பல இலட்ச இரசிகர்களில் நானும் ஒருவனாய் இலங்கை அணியின் முதலிடத்தை எதிர்பார்த்தபடி.........

No comments:
Post a Comment